27.02.2014

செல்வ வளம் பெருக்கும் சிவராத்திரி


செல்வ வளம் பெருக்கும் சிவராத்திரி

அம்பிகைக்கு உகந்த விழா நவராத்திரி விழா. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. அணி திகழும் சிவனுக்கு கொண்டாடும் விழா சிவ(ன்) ராத்திரி. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது.

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவ பெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாயநம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது, 'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்த திருநாள் 27.2.2014 அன்று வியாழக்கிழமையன்று வருகிறது.

அந்தப் புனிதமான நன்நாளில் விரதமிருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். அன்றைய தினம் பிரதோஷமும் வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். நந்தியையும் வழிபட்டு நலம் காண உகந்த நாளாக இந்த நாள் அமைகிறது.

முற்காலத்தில் எல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிகம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தொடர்ந்து தினந்தோறும் செய்து வருவார்கள். எனவே, நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண் தெய் வழிபாடாக வைத்து, முத்தாய்ப்பாக அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளை 'விஜய தசமி' யாகக் கொண்டாடினர்.

ஆண்கள் பொருள் தேடும் பொருட்டு, தொழில் துறைகளில் ஈடுபடுவதால், தெய்வ வழிபாட்டிற்கு என்று சிறிது நேரம்தான் ஒதுக்க இயலும். அதையும் வருடத்தில் ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்குக் கிடைக்கும்.

அதனால்தான் ஆண்களுக்கு 'சிவராத்திரி' விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் 12 மணிக்காலம் எனப்படும் நேரத்தில் காவல் தெய்வமாக விளங்கி அருள்வழங்கும் சிவபெருமானையும், உமையவளையும் வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வ வளம் பெருக்கும் சிவராத்திரி!

முதலில் விநாயகப் பெருமானையும், சிவன், உமையவளையும் வழிபட்டு வருவது நல்லது. சிவராத்திரியன்று இரவு முழுவதும் தூங்காமல் சிவனின் நான்கு கால பூஜைகளையும் விழித்திருந்து சிறப்பாக வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், இன்னல்கள் தீரும்.

மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான வாழ்வும் அமையும். உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய திருக்கரங்களால் மூடியதால் உலகமே இருளால் சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்றும் புராணங்கள் சொல்கின்றன.

அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்கு எல்லாம் ஒளி கொடுக்க சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே, இருள் மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணிமுதல் 1 மணி வரை 'லிங்கோத்பவர்' காலமாகும்.

அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்கும். வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும்.

உலகம் சிவமயமாக இருக்கிறது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவே தான் நாம் எழுதத் தொடங்கும் பொழுது 'பிள்ளையார் சுழி', 'சிவமயம்' என்று நமச்சிவாய நமச்சிவாய நல்ல மந்திரம் நாளும் சொன்னால் நல்லநேரம் நமக்கு வந்திடும்! பொற்கிழியைத் தருமி வாங்க உதவி செய்தவன் புகழ்க்கொடியை நாட்டிவைக்க அருள் கொடுப்பவன்! நற்பதவி நமக்குவர சிவனை வணங்குவோம்!